செய்திகள்
திருமாவளவன்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் - திருமாவளவன் கண்டனம்

Published On 2020-10-08 11:38 GMT   |   Update On 2020-10-08 11:38 GMT
கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் மூன்று போலீஸ்காரர்கள் இடமாற்றம்? செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை:

கடலூரில் செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று அண்ணா பாலம் அருகில் இருக்கும் அவரது சிலைக்கு புது நகர் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் 3 பேர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த புகைப்படங்களை சமுக வலைதலங்களில் பதிவேற்றினர். இதன் காரணமாக அவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மூவரும் காவலர் உடையில் மாலை அணிவிக்கவில்லை, கருப்பு சட்டை அணிந்துதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இருப்பினும் இவர்கள் மாலை அணிவித்திருப்பதை பார்த்த சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பணியில் இருக்கும் போது எப்படி பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் இவர்களை இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஆனால், நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக மட்டும் அவர்களிடம் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றம் செய்திருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News