செய்திகள்
ஆண்டிப்பட்டியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை படத்தில் காணலாம்.

ஆண்டிப்பட்டியில் “ஓ.பி.எஸ். எனும் நான்...” என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

Published On 2020-10-08 03:02 GMT   |   Update On 2020-10-08 03:02 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் “ஓ.பி.எஸ். எனும் நான்...”என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி :

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் அக்கட்சியினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது. மேலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியிலும் சில இடங்களில் அவரது ஆதரவாளர்கள், அடுத்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக அ.தி.மு.க.வினர் இடையே நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்தநிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. ஒன்றிய இளைஞர் பாசறை சார்பில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவியேற்பது போன்று பெரிதாக படம் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே “ஓ.பி.எஸ். எனும் நான்...” என்ற வாசகமும் இருந்தது. அதாவது முதல்-அமைச்சராக பதவியேற்கும் போது இதுபோன்று உறுதிமொழி ஏற்பார்கள். அந்த வகையில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டரால் ஆண்டிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இருந்தன. இதுதவிர ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிலைப்படுத்தி மேலும் சில போஸ்டர்களும் ஆண்டிப்பட்டி நகரில் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News