செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

பிரச்சினையில் குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-10-07 07:23 GMT   |   Update On 2020-10-07 07:23 GMT
பிரச்சினை வராதா, அதில் குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை இன்று அறிவித்தார். இதன்பின்னர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மகிழ்ச்சியான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிரச்சினைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

Similar News