செய்திகள்
காவிரி ஆற்றில் பரிசல் இயக்க கர்நாடக அரசு அனுமதி
கர்நாடக மாநில எல்லையான மாறுக்கொட்டாய் பகுதியில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உற்சாகத்துடன் பரிசலில் சென்றனர்.
பென்னாகரம்:
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் சுற்றுலா தலங்களை திறக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாறுக்கொட்டாய் காவிரி ஆற்றுப்பகுதியில் பரிசல்கள் இயக்க அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன் காரணமாக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள மாறுக்கொட்டாய் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.
கர்நாடக சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை சுற்றிப்பார்த்து ரசித்தனர். எனவே கர்நாடக அரசு பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளித்தது போல தர்மபுரி மாவட்ட நிர்வாகமும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என இங்குள்ள பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.