செய்திகள்
பழ.நெடுமாறன்

தவறான முன்னுதாரணம்... கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

Published On 2020-10-02 09:30 GMT   |   Update On 2020-10-02 09:30 GMT
தடையை மீறி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. கிராம சபை கூட்டங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்த நிலையில், கிராம சபை கூட்டங்களை மாவட்ட நிர்வாகங்கள் ரத்து செய்தன. 

ஆனாலும், தடையை மீறி இன்று பல இடங்களில் திமுகவினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர். அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாகக் கூடி ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து, விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். இக்கூட்டங்களில் வெளியார்கள் பங்கேற்றால் கூட்டத்தின் நோக்கமே சிதைந்து போகும்.

இந்த மரபை மீறும் வகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது சனநாயக முறைகளை மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், இவ்வாண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஸ்டாலின் விரும்பினால், தனது கட்சிக்காரர்களுடன் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News