செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

கோவில்களில் சாமி தரிசனம்- முக்கிய முடிவை அறிவிக்கப்போகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

Published On 2020-10-02 03:05 GMT   |   Update On 2020-10-02 03:05 GMT
முருகன் மற்றும் அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய முடிவை அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைந்த பிறகு, தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதனால், அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. பிறகு மீண்டும் ஒன்றிணைந்த அவர், கட்சி மற்றும் ஆட்சியில் பதவியை பெற்றார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங் களே இருக்கிறது. சசிகலாவும் சிறையில் இருந்து வெளிவர இருப்பதால், அ.தி. மு.க.வில் இப்போதே முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வரும் வழியில் பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார்.

பொதுவாக, எந்த முக்கிய முடிவையும் எடுத்து அறிவிப்பதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம், முருகன் கோவிலுக் கும், அம்மன் கோவிலுக்கும் செல்வது வழக்கம் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பார்த்தால், இன்றோ, நாளையோ ஓ.பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்கள் மத்தியில் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.
Tags:    

Similar News