செய்திகள்
ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி
உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண்ணை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அப்பெண் மரணம் அடைந்தார். மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல்காந்தி ஹத்ராஸ் செல்லும் வழியில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடுக்க முயன்றபோது அவர் நிலைதடுமாறி கிழே விழுந்தார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி எம்.பி. தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது. ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. உ.பி.யில் ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.