செய்திகள்
ராஜேஷ்தாஸ் - ஜெயந்த்முரளி

சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜேஷ்தாஸ் நியமனம்

Published On 2020-10-01 02:00 GMT   |   Update On 2020-10-01 02:00 GMT
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு செயலாக்கப்பிரிவில் பணியாற்றினார்.

* லஞ்ச ஒழிப்பு இயக்குனராக பணியாற்றிய டி.ஜி.பி. விஜயகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

* அவருக்கு பதில் லஞ்ச ஒழிப்பு இயக்குனராக ஜெயந்த் முரளி பதவி ஏற்கிறார். ஜெயந்த் முரளி தற்போது தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ளார்.

டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு இயக்குனர் பதவி தற்போது கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு புதிய கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்க உள்ள ராஜேஷ்தாஸ் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் சேர்ந்தார். முதலில் தூத்துக்குடியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கிய அவர், அதே மாவட்டத்தில் சூப்பிரண்டாகவும் சிறப்பாக செயல்பட்டார். தேனி, திருவள்ளூர் மாவட்டங்களிலும் சூப்பிரண்டுகளாக பதவி வகித்துள்ளார்.

மதுரையில் தென் மண்டல ஐ.ஜி., சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர், தென் சென்னை கூடுதல் கமிஷனர் போன்ற பதவிகளில் திறம்பட பணியாற்றியுள்ளார். கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை போன்றவற்றில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றியதில் இவர் பாராட்டு பெற்றார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் இவருடைய மனைவி ஆவார்.

தற்கிடையில், நேற்று பிற்பகலில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜேஷ்தாஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல லஞ்ச ஒழிப்பு இயக்குனராக ஜெயந்த்முரளியும் நேற்றே பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, டி.ஜி.பி. விஜயகுமார் விடைபெற்று சென்றார். நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற டி.ஜி.பி. விஜயகுமாருக்கு அரசு சார்பில் வழிஅனுப்பு விழா எதுவும் நடைபெறவில்லை. அவருக்கு எழும்பூர் போலீஸ் விருந்தினர் மாளிகையில் மதிய விருந்து நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றதாக தெரிகிறது. டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News