செய்திகள்
பழனியில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு
பழனியில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). இவர் சண்முகபுரம் உழவர்சந்தை எதிரே மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு அவர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடை திறக்க வந்தபோது மேற்கூரை உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி., ரூ.6 ஆயிரம், உண்டியல்களில் வைத்திருந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த ஒரு நபர் பொருட்களை திருடி செல்வது தெரியவந்தது. அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.