கொரோனா அச்சத்தால் இதய நோயாளிகள் சிகிச்சையை தாமதப்படுத்தக்கூடாது- டாக்டர்கள் வலியுறுத்தல்
சென்னை:
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பின்னடைவாக இருந்து வருகிறது. குறிப்பாக இதயநோய் உள்ளவர்களுக்கான சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.
இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிக அளவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று உலக இதய தினத்தையொட்டி “கொரோனா அச்சத்தால் இதய பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சையை தாமதப்படுத்தக்கூடாது” என்று டாக்டர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
கடந்த 6 மாதங்களாக கொரோனா வைரசால் மற்ற நோய்களுக்கான சிகிச்சையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு இதய நோயாளிகள் தங்களது பரிசோதனைகளை தாமதப்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தபோதும் ஆஸ்பத்திரிக்கு செல்வதை தாமதப்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தலாம். எனவே இதய நோயாளிகள் தங்களது பரிசோதனைகளை தாமதப்படுத்திக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும் உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “இதய நோயாளிகளுக்கு 2 விதமான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேவேளையில் அவர்களது இதயத்தை காப்பாற்றுவதற்கான சிகிச்சையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்து உள்ளது.