செய்திகள்
சிவகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
சிவகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நேற்று நடந்தது.
சிவகிரி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்போது அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. சிவகிரி தாசில்தார் ஆனந்த் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முகாமில் துணை கலெக்டர் கோகிலா, தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வநாயகம், மண்டல துணை தாசில்தார் சரவணன், குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் முத்துக்குமார், (சிவகிரி) சிவனுபாண்டி (வாசுதேவநல்லூர்), நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் லெனின் (சிவகிரி), சுதா (வாசுதேவநல்லூர்), மோகன மாரியம்மாள் (ராயகிரி), வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சந்திரா, வேலம்மாள், வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சேக் அப்துல்லா, சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 172 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்தார்.