செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 113 பேருக்கு அபராதம்
குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 113 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முககவசம் அணிய வேண்டும், கடைகளுக்கு சென்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கட்டப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 113 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.23 ஆயிரத்து 200 வசூலானது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் 1 லட்சத்து 67 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீட்டுதனிமை என 705பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். இதில் கோவிட் சுகாதார மையத்தில் இருந்து 34 பேரும், கோவிட் கவனிப்பு மையத்தில் இருந்து 32 பேரும் குணமடைந்து வீடு திருப்பினர்.
இந்த தகவலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.