செய்திகள்
சாத்தான்குளம் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சாத்தான்குளம் அருகே பாட்டி திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சுப்புராயபுரம் பெருமாள் கோவில் தெரு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்புக்கரசி, அங்குள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு கவுதம் (வயது 17) என்ற மகனும், கவுரி (15) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் சுப்புராயபுரத்தில் உள்ள தங்களுடைய பாட்டி கமலாவதி வீட்டில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தனர். கவுதம் பிளஸ்-2 வகுப்பும், கவுரி 9-ம் வகுப்பும் படித்தனர்.
இந்த நிலையில் கவுரி சரியாக வீட்டு வேலை செய்யாததை பாட்டி கமலாவதி கண்டித்தார். இதனால் மனமுடைந்த கவுரி நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கவுரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.