செய்திகள்
கொள்ளை

சிறுகனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 5 பவுன் நகை கொள்ளை

Published On 2020-09-28 11:47 GMT   |   Update On 2020-09-28 11:47 GMT
சிறுகனூர் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
சமயபுரம்:

சிறுகனூர், கணபதி நகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 41). இவருடைய மனைவி வளர்மதி (35). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. இவர்களுக்கு சொந்தமான மாடி வீடு பழுதடைந்து உள்ளதால் அந்த வீட்டிற்கு எதிரே உள்ள மற்றொரு வீட்டில் தங்கி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு சாப்பிட்ட பின்பு, வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை எழுந்து வெளியில் வந்து பார்த்தபோது மாடி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ரவி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருச்சியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News