சேலத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது.
கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 300-க்கும் குறைவாக பரவிய கொரோனா தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 378 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மாநகரில் மட்டும் 177 பேர் அடங்குவர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 685ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 568 ஆக உள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 304 பேர் பலியாகி உள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மேலும் சமூக இடை வெளியை கடைபிடிப்பதும், முககவசங்களை அணிவதும் தற்போது குறைந்துள்ளது. இதனால் கொரோனா அதிவேகமாக பரவுகிறதோ? என்ற அச்சம் நிலவுகிறது.
கொரோனாவுக்கு முதியவர்கள் மற்றும் நீரழிவு, நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உயிர் இழக்கிறார்கள். எனவே முதியவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும், பொதுமக்கள் சமூக இடை வெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து சென்றால் மட்டுமே கொரோனாவை தடுக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.