செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னையில் கோவிஷீல்டு பரிசோதனை துவக்கம்

Published On 2020-09-28 07:37 GMT   |   Update On 2020-09-28 07:37 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மருந்தை பரிசோதனை செய்யும் பணி சென்னையில் தொடங்கியது.
சென்னை:

கொரோனாவை கட்டுப்படுத்த பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு அவர்களுடைய உடல்நிலையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தசூழலில், பிரிட்டனில் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் பிரிட்டனில் சோதனைகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறி அனுமதி கொடுத்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகே நிறுவனம் பரிசோதனையை தொடங்கியது. இதனையடுத்து ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. பரிசோதனையில் பங்கேற்கும் தன்னார்வலர்களின் பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனையில் கலந்துகொள்ளும் தன்னார்வலர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி, அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 16 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News