செய்திகள்
கோப்புபடம்

ரேஷன் கடைகளில் 1-ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை: குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்

Published On 2020-09-28 05:15 GMT   |   Update On 2020-09-28 05:15 GMT
ரேஷன் கடைகளில் வருகிற ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.
சென்னை:

தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றால் ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்ட்டை கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யப்படும். 

தேவையான பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையின் மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் வேலை செய்பவர், தெரிந்தவர்கள் என யாரும் வந்து கார்டை காட்டி பொருட்களை வாங்க முடியும்.  இதில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதை தடுக்கும் வகையில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் விரல் ரேகையை பதிவு செய்து மட்டுமே, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 

இதன்மூலம், ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலை உருவாகும். இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை தெற்கு துணை ஆணையர் பெர்சி சாமுவேல் சென்னை உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். 

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கைரேகை பதிவின் மூலம் வழங்குவதற்கு பழைய விற்பனை முனைய இயந்திரத்தை மாற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் வரும் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய 2 நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. எனவே, அந்த நாட்களில் பொருட்கள் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்கள் இன்றும் நாளையும் (செப்.28, 29) பொருட்கள் பெற்று செல்லலாம். 

புதிய விற்பனை முனையை இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் ஒரு வேளை விற்பனை முனைய இயந்திரத்தை அலட்சியமாக, தவறாக கையாளுதல் அல்லது சேதப்படுத்தினால் அதனை சரி செய்ய அல்லது மாற்றி வழங்குவதற்கான தொகை, சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளரே செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.                   

Tags:    

Similar News