குஷ்பு பா.ஜனதாவில் இணைய முடிவா? எல்.முருகன், சுந்தர்-சி சந்தித்ததால் திடீர் பரபரப்பு
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும், தமிழக காங்கிரசின் நட்சத்திர பேச்சாளராகவும் இருப்பவர் குஷ்பு.
இவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதா நிர்வாகி என்ற பெயரில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பு கடுமையாக விமர்சித்தார். கடைசியில் அந்த பதிவை வெளியிட்டவர் பா.ஜனதா நிர்வாகியே அல்ல என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மீண்டும் அவர் பா.ஜனதாவில் இணையபோவதாக தகவல்கள் பரவி உள்ளது. அதற்கு காரணம் குஷ்புவின் கணவர் சுந்தர்-சி தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசியதுதான்.
ஆனால் குஷ்புவுக்கு நெருக்கமானவர்கள் இதை மறுத்தனர். தேவையற்ற வதந்திகளை வேண்டுமென்றே பரபரப்புக்காக பரப்புகிறார்கள்.
சுந்தர்-சி அவரது நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு எல்.முருகனும் சென்றுள்ளார். அப்போது நேரில் சந்தித்ததால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். இதுதான் நடந்தது. ஆனால் இதையே அரசியல் ஆக்குகிறார்கள்.
குஷ்பு காங்கிரசில் தீவிரமாக செயலாற்றி வருபவர். நேற்று முன்தினம் கூட தினேஷ் குண்டுராவ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். எதிர் வரும் சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்றனர்.