செய்திகள்
முக கவசம் அணியாத 86 ஆயிரம் பேரிடம் ரூ.1½ கோடி அபராதம் வசூல்
முக கவசம் அணியாத 86 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் பொதுமக்கள் கைகளை கழுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். அதனை கண்காணிக்க அரசு துறைகள் சார்பில் பல்வேறு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் முக கவசம் அணியாத மக்களிடம் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகள் அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. அதன்படி நூற்றுக்கணக்கான கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் முக கவசம் அணியாத 86 ஆயிரத்து 811 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 80 ஆயிரத்து 750 வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சியினர் 15 ஆயிரத்து 972 பேரிடம் இருந்து ரூ.31 லட்சத்து 34 ஆயிரத்து 500 வசூலித்துள்ளனர். நகராட்சிகள் 3 ஆயிரத்து 82 பேரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 200-ம், டவுன் பஞ்சாயத்துக்கள் சார்பில் 10 ஆயிரத்து 571 பேரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 500-ம், கிராம பஞ்சாயத்துக்கள் சார்பில் 2 ஆயிரத்து 238 பேரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வசூலித்துள்ளனர்.
மாநகர போலீசார் சார்பில் 30 ஆயிரத்து 460 பேரிடம் இருந்து ரூ.56 லட்சத்து 74 ஆயிரத்து 900-ம், மாவட்ட போலீசார் சார்பில் 11 ஆயிரத்து 141 பேரிடம் இருந்து 21 லட்சத்து 11 ஆயிரமும், பறக்கும் படையினர் சார்பில் 13 ஆயிரத்து 347 பேரிடம் இருந்து 24 லட்சத்து 3 ஆயிரத்து 650 வசூலித்துள்ளனர்.