செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-09-26 07:13 GMT   |   Update On 2020-09-26 07:13 GMT
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவமழை ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை 3.45 மணி முதல் 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், அயனாவரம், போரூர், வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் மழை பெய்தது.

நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை இருந்தது. மாலையில் கனமழை குறைந்து தூறலாக பெய்தது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

புறநகர் பகுதியிலும், மாலையில் நல்ல மழை பெய்தது. இதனால் சென்னைக்கு நீர் வழங்கக்கூடிய ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News