செய்திகள்
தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு- குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறி அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்ததாகவும், அந்த பள்ளியை மீண்டும் திறக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ள முதலமைச்சர், தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார்.