காரமடை அருகே யானை தாக்கி டிராக்டர் டிரைவர் பலி
கவுண்டம்பாளையம்:
கேரள மாநிலம் மன்னார்கட்டை சேர்ந்த மனோஷ் என்ற ஞானபிரகாசம் (வயது 31) டிராக்டர் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் அருண்குமார் (32).நேற்று இவர்கள் 2 பேரும் போப்நாரி பகுதியில் விவசாய பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். போப்நாரி மூனுகுட்டை பிரிவு கருப்பராயன் கோவில் அருகே வந்தபோது புதர்மறைவில் இருந்த யானை மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனைபார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருண்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டினார். இருந்தாலும் பின்னால் அமர்ந்திருந்த ஞானபிரகாசம் தும்பிக்கையால் பிடித்து இழுத்தது.
இதில் நிலைதடுமாறி அவர் கிழே விழுந்தார். அவரை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த ஞானபிரகாசம் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அங்கிருந்த யானையை விரட்டி விட்டு ஞானபிரகாசத்தை மீட்டனர். அப்போது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் சுரேஷ், காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஞானபிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.