செய்திகள்
இறந்தவர் உடலை தகனம் செய்ய விறகுகளை தயார் செய்யும் ஜோதி.

மயான வேலையில் ஈடுபட்டு 8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்

Published On 2020-09-23 18:55 GMT   |   Update On 2020-09-23 18:55 GMT
ராமநாதபுரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் தகனம் செய்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் மின்மயானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிணங்களை எரிக்கும் பணி செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் குடும்பத்தை காப்பாற்ற வழிதெரியாமல் திகைத்து கொண்டிருந்த ஜோதி தனது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மயான தொழிலை செய்ய துணிந்தார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் பிணங்களை தகனம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.

இதுகுறித்து ஜோதி கூறியதாவது:-

எனது கணவர் இங்கு வேலை பார்த்தபோது அவருக்கு சாப்பாடு கொடுக்க வருவேன். அப்போது அவர் மயான வேலையை கற்றுக்கொடுத்தார். நான் இந்த தொழிலை செய்ய தொடங்கியதும் ஆரம்பத்தில் எங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் யாரிடமும் கை ஏந்தாமல் சொந்த காலில் நிற்பதை கண்டு ஏற்றுக்கொண்டனர்.

இரவு, பகல் பாராமல் இதுவரை சுமார் 8 ஆயிரம் உடல்கள் வரை எரித்துள்ளேன். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விபத்து, தற்கொலை, அனாதை பிணம் போன்றவைதான். எனது இந்த வாழ்வில் மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர் உடலை எரிக்க ஆரம்பித்து விடிய விடிய எரியவில்லை. என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. அதேபோல, மதுரையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பிள்ளைகள் இறுதிச்சடங்கிலும் எங்களின் பெற்றோர் இணைபிரியாமல் செல்ல வேண்டும் என்று கூறினர். அதனால் இருவரின் உடலையும் ஒரே சமயத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து தகனம் செய்தேன். இதுபோன்ற ஆத்ம திருப்திதான் இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும். பிரேத பரிசோதனை செய்த உடல்களை இரவு நேரங்களில் கொண்டுவந்து கொடுப்பார்கள். விடிய விடிய தனி ஆளாக சில நேரங்களில் மின்சாரம் இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் எரியூட்ட வேண்டி இருக்கும்.

இந்த சுடுகாட்டினை நான் கோவிலாகத்தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் வறுமையில் இருந்தபோது இந்த தொழில் செய்வதால் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் அழைப்பது இல்லை. இப்போது என்னை ஏற்றுக்கொண்டு அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மயான வேலையை ஆண்களே சவாலாக நினைக்கும் இந்த காலத்தில், குடும்பத்தை காப்பாற்ற ஜோதி இந்த வேலையை ஏற்றுக்கொண்டிருப்பது அவரை பாரதி கண்ட புதுமை பெண்ணாக தெரிய வைத்திருக்கிறது.
Tags:    

Similar News