செய்திகள்
புகார்

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை காரணமாக மேலும் ஒரு இளம்பெண் இறந்ததாக புகார்

Published On 2020-09-23 10:10 GMT   |   Update On 2020-09-23 10:10 GMT
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை காரணமாக மேலும் ஒரு இளம்பெண் இறந்ததாக உறவினர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் மின்தடையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

திருப்பூர் மூம்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா(45). இவரும் நேற்று ஏற்பட்ட மின்தடையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது உறவினர் அனுராதா மூம்மூர்த்தி நகர் பகுதியில் டீகடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நாங்கள் அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந் தேதி சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உடல்நிலை மோசமாகவே கடந்த 21-ந் தேதி அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன் செல்லாமல், எங்களது உறவினர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார். எங்களது உறவினர் இறந்ததற்கு காரணம் மருத்து வமனையின் அலட்சியமே காரணம். எனவே இறப்பிற்கு காரணமாக டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News