செய்திகள்
வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - 30 பேர் கைது
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமநாத துளசி அய்யா வாண்டையார் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் கலைச்செல்வன், தெற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், ஊடகப்பிரிவு தலைவர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வேளாண்மை அவசர சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக கூறி அதை கண்டித்தும், இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், வேளாண்மை அவசர சட்டங்களை மத்தியஅரசு திரும்ப பெற கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இவர்கள் அனைவரும் மாதாக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் இவர்கள் மீது தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.