செய்திகள்
குற்றாலம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
குற்றாலம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
குற்றாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இலஞ்சி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலஞ்சி அருகே வள்ளியூர் சந்திப்பு பகுதியில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்தினர். உடனே 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அதில் வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 24) மற்றும் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோரை சோதனை செய்தபோது அவர்கள் இருவரும் தலா 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும், அதனை விற்பதற்காக சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் கலிங்கப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு முரணாக பேசியதால், அவரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் தலா 10 கிராம் எடையுள்ள 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், மேல மரத்தோணியை சேர்ந்த கருப்பசாமி மகன் தண்டாயுதபாணி (37) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர் வர மறுத்து போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டாயுதபாணியை கைது செய்தனர்.