செய்திகள்
மு.க.ஸ்டாலின்

மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-09-22 02:24 GMT   |   Update On 2020-09-22 02:24 GMT
இணையவழி தொழில்நுட்ப கோளாறுகளை களைந்து மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.

அவ்வாறு மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலம் இறுதி தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரி தேர்வுகளையும் 19-ந்தேதி அன்று நடத்தி இருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக ‘ஆன்லைன்’ வாயிலான இறுதி தேர்வுகள் எப்படி நடைபெறப்போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.

மாதிரி தேர்வின் போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக்கருவி, தேர்வு எழுதிய பல மாணவர்களைப் பதிவு செய்ய தவறி இருக்கின்றது. ஒலி அமைப்பும் சரியாக வேலை செய்யாது இருந்திருக்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தில் உட்புகவே இயலாமற் போயிருக்கின்றது. இதன் விளைவாக பல மாணவர்கள் தேர்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவர்களும் கூடத் தேர்வு எழுதியதாகவே பதிவுசெய்யப்படாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளை களைந்து, மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரி தேர்வினை பிரச்சனைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித்தேர்வுகளை நடத்திட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆயினும், மாதிரி தேர்வை அன்றைய தினம் எழுதாத மாணவர்களுக்கு மட்டுமே மற்றொரு மாதிரி தேர்வு நடத்தப்படும் என தேர்வுத்துறை தெரிவித்து இருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மாதிரி தேர்வுகளிலேயே இவ்வளவு குளறுபடிகள் மலிந்திருந்தால், எந்த நம்பிக்கையில் இறுதி தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் எழுத முடியும் என்ற மனக்குழப்பமும், பெரும் பதற்றமும் மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. இதன் வாயிலாக தங்கள் தேர்வு முடிவுகளில் ஏற்படக்கூடிய பாதகமான சூழல், தங்கள் எதிர்காலத்தையே பாழ்படுத்திவிட கூடும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உறைந்து போய் உள்ளனர்.

இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சரை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News