தேனி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த 11 பேர் மீது வழக்கு
தேனி:
தேனி அருகே உள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் செல்வதுரை. இவரது 14 வயது மகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தேனியில் அந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட சமூக நல அலுவலரும் குழந்தை திருமணம் தடுப்பு அலுவலருமான சண்முக வடிவு தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு விருப்பம் இல்லாமல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சண்முக வடிவு புகார் அளித்தார். அதன் பேரில் சிறுமியை திருமணம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி (27), அவரது தந்தை ஈஸ்வரன், தாய் விஜயா, உறவினர்கள் மகேஸ்வரன், ரகு, பத்மா உள்பட 11 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.