சேலம் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர்- புளியங்குடியில் சிக்கினார்
தென்காசி:
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ் குமார் (21). கடந்த 17-ந் தேதி அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தனர்.
தலைமறைவான இவர் தென்காசி மாவட்டத்தில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சோதனை சாவடிகள் ஆகியவற்றில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புளியங்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி பஸ் நிலையம் அருகில் தலைமைக் காவலர் முருகன் மற்றும் போலீஸ்காரர் சுதந்திரராஜன் ஆகியோர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் சேலத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்படும் நரேஷ் குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இங்கு வந்து நரேஷ்குமாரை அழைத்து சென்றனர்.