செய்திகள்
தஞ்சை அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
தஞ்சை அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தான்.
கள்ளப்பெரம்பூர்:
தஞ்சையை அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் காமாட்சி அம்மன் தோட்டத்தை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 3 வயதில் நிஷாந்த் என்ற ஆண் குழந்தையும், 9 மாதத்தில் தரணீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். சம்பவத்தன்று தரணீஸ்வரனுக்கு, ரஞ்சிதா உணவு கொடுத்து விட்டு பின்னர் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
குழந்தைகள் இருவரும் வீட்டு வாசலில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது தரணீஸ்வரன் தவழ்ந்து சென்று தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியை பிடித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக தலைகுப்புற தண்ணீர் வாளியில் தவறி விழுந்தான்.
இதனை பார்த்த நிஷாந்த் சத்தம் போட்டான். அவனது சத்தத்தை கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த ரஞ்சிதா வாளியில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை தரணீஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து குழந்தை தரணீஸ்வரன் உடல் நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.