செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது- அமைச்சர் உதயகுமார்

Published On 2020-09-19 04:32 GMT   |   Update On 2020-09-19 06:27 GMT
அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே எழுந்த காரசார விவாதங்களையடுத்து, உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.




இந்நிலையில் இன்று காலை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது. ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக இருக்கிறது. அதிமுக அன்பு என்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைவரும் கருத்துகளை தெரிவிக்கவே அவசரக்கூட்டம்.

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைக்கும் கூட்டணியால் எதிர்க்கட்சிகள் திக்குமுக்காடிபோகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News