செய்திகள்
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: அண்ணன்-தங்கை பலி
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணனும், தங்கையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் சோமு. இவருடைய மகன் ஆனந்தராஜ்(வயது 28). இவர், சென்னையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். மகள் அபிநயா(25). முதுகலை பட்டதாரியான அபிநயா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அண்ணன்-தங்கை இருவரும் ஊருக்கு வந்திருந்தனர்.
நேற்று மாலை ஆனந்தராஜும், அவருடைய தங்கை அபிநயாவும் மன்னார்குடி அருகே உள்ள தென்பாதி கிராமத்திற்கு உறவினரின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தராஜ் ஓட்டி சென்றார்.
மன்னார்குடி அருகே வடபாதி சொக்கப்பெருமாள் கோவில் பகுதியில் முத்துப்பேட்டை சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே தென்பாதியில் இருந்து மன்னார்குடி நோக்கி செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்தராஜ், அபிநயா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தலையாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவருடைய உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த மகேந்திரன் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் அண்ணனும், தங்கையும் பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.