செய்திகள்
திருச்செங்கோடு அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
திருச்செங்கோடு அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9¾ லட்சம் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ராயர்பாளையம், புதுக்காடு, நல்லையகவுண்டர் காடு உள்ளிட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் சேலம் மாவட்டம் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த ராமன் (வயது 41), மேச்சேரி எரகுண்டபட்டியை சேர்ந்த வேலன் (50), கோல்காரனூரை சேர்ந்த அசோகன் (36), கொண்டலாம்பட்டியை சேர்ந்த பெருமாள் (50), முத்து (40) மற்றும் கோவையை சேர்ந்த தனசேகர் (38), ராஜா (36), அருண் (35) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 76 ஆயிரம் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.