செய்திகள்
சாத்தான்குளம் வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அளித்த ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிறையில் உள்ள ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதான 10 பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.