திருச்சி அருகே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல்
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சேங்குடி பகுதியை சேர்ந்தவர் மூக்கன். தி.மு.க. தொண்டரான இவர், திடீரென அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றில் மீது திடீரென ஏறினார். பின்னர் அதில் நின்று கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு தற்கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் மூக்கனை கீழே இறங்கி வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் இறங்க மறுத்து தொட்டிமேல் நின்று கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூக்கனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே வருமாறு கூறினர். ஆனால் அவர் தொட்டியில் இருந்து இறங்க மறுத்தார்.
இதனால், போலீசாரும், அப்பகுதி மக்களும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி மூக்கனை கீழே அழைத்துக்கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.