செய்திகள்
மணிகண்டன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை போலீசார் பார்வையிட்ட போது எடுத்த படம். (உள்படம்-மணிகண்டன்)

திண்டுக்கல் அருகே பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை

Published On 2020-09-16 11:47 GMT   |   Update On 2020-09-16 11:47 GMT
திண்டுக்கல் அருகே வாலிபர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பழைய கரூர் சாலை முத்தமிழ் நகர் அருகே நேற்று ஓடைப்பட்டி காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மது பாட்டிலால் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் திண்டுக்கல் சாலையூர் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சகாதேவன் மகன் மணிகண்டன் (வயது 23) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும் அவரது உடல் அருகே மது பாட்டில்கள் கிடந்தது. இதனால் மது போதையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறில் அவர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மணிகண்டனின் உடலை மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மணிகண்டனின் தந்தை சகாதேவன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனின் நண்பர் அஜித் என்பவரை போலீசார் பிடித்து மணிகண்டன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News