செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே புதுப்பெண் கொலையில் கணவன் உள்பட 3 பேர் கைது

Published On 2020-09-14 09:19 GMT   |   Update On 2020-09-14 09:19 GMT
திருமங்கலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை கொலை செய்த கணவன் உள்பட 3 பேரை போலீசா கைது செய்தனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வி.அம்மாபட்டியை சேர்ந்தவர் தவுடன். இவரது மகள் ஜெயசக்தி பாலா (வயது 17). கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஜெய்சக்தி பாலாவுக்கும், விருதுநகர் மாவட்டம் மத்தியசேனையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

ஜெயசக்தி பாலாவுக்கு திருமணத்தின்போது 17 வயது என்பதால் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் 18 வயது பூர்த்தியானவுடன் இருவரும் இணைந்து வாழலாம் என கூறி ஜெயசக்தி பாலாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு ஜெயசக்தி பாலா வி.அம்மாபட்டி கண்மாய் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஜெயசக்தி பாலா யாருடன் பேசினார் என்பது தொடர்பாக அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயசக்தி பாலாவின் கணவர் முத்துப்பாண்டி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் மேலும் 2 பேருடன் சேர்ந்து மனைவி ஜெயசக்தி பாலாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ஜெயசக்தி பாலாவை திருமணம் செய்வதில் முத்துப்பாண்டிக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இருப்பினும் திருமணம் நடந்தது. ஆனால் வயதை காரணம் காட்டி பிரித்து வைத்தனர்.

அதன் பிறகு ஜெயசக்தி பாலாவை பார்ப்பதற்காக வி.அம்மாபட்டிக்கு முத்துப்பாண்டி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள சிலர் ஜெயசக்தி பாலா நடத்தை பற்றி தவறாக பேசி உள்ளனர். இதனால் முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் மனைவியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதுவே பின்னர் தகராறாகி மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறினார். ஆனாலும் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட முத்துப்பாண்டி அவரை கொலை செய்ய திட்ட மிட்டார். இதற்காக தனது நண்பர் மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த ஹரீஸ், உறவினர் அருண்குமார் ஆகியோரிடம் பேசினார். அதன்படி சம்பவத்தன்று இரவு ஜெயசக்தி பாலாவை வி.அம்மாபட்டி கண்மாய்க்கு வரவழைத்து 3 பேரும் கத்தியால் குத்தினர். 13 இடங்களில் கத்திக்குத்துப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம்பெண்ணை கொலை செய்த அவரது கணவர் முத்துப்பாண்டி, அருண்குமார், ஹரீஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News