எட்டயபுரம்-ஓட்டப்பிடாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம்:
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், புதிய அவசர சட்டத்தை கை விடக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எட்டயபுரம், ஓட்டப்பிடாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சேது தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசினை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அழகு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயன், செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி. ஒன்றிய செயலாளர் மகராஜன், தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர்கள் சவுந்தரபாண்டியன், கணேசமூர்த்தி, சந்தானம், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.