செய்திகள்
தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் முன்பு உதவித்திட்டத்தில் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்த கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
மத்திய அரசின் விவசாயிகளுக்கான உதவித்திட்டத்தில் தகுதியற்ற ஆயிரக்கணக்கோனார் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட நிர்வாகி மகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, வட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
நல்லம்பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மல்லையன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தீர்த்தகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பகுதி குழு செயலாளர் அயோத்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சக்திவேல், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கான மத்திய அரசின் உதவித்திட்டங்களில் தகுதியற்றோர் பயனடைய உதவியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுள்ள ஏழை, எளிய விவசாயிகள் மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.