புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக வேளாங்கண்ணியில் பக்தர்கள் வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேளாங்கண்ணியில் பக்தர்களை எவ்வாறு பாதுகாப்புடன் பேராலயத்துக்குள் அனுமதிப்பது? என்பது குறித்து நேற்று மாலை மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது நாகை உதவி கலெக்டர் பழனிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். கடற்கரை சாலை, பேராலய வளாகம், கலையரங்கம், சிலுவை பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேராலயத்தில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தி அனுப்புவது என்பது குறித்து பேராலய நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இன்று(செவ்வாய்க்கிழமை) முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர் ஆகியோர் தெரிவித்தனர்.