செய்திகள்
கொலை

கும்பகோணம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கொலை

Published On 2020-08-27 09:50 GMT   |   Update On 2020-08-27 09:50 GMT
கும்பகோணம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள வண்ணக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கல்யாண சுந்தரம் (வயது31). எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு கல்யாணசுந்தரம் தனது வீட்டு வாசலில் நின்றிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் இவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரும் கல்யாணசுந்தரத்திடம் சென்று முன்விரோதம் காரணமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து கல்யாணசுந்தரத்தை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கல்யாணசுந்தரத்தின் உறவினர் மகளை நவீன் காதலித்து வந்ததாகவும், இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் கல்யாணசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்யாணசுந்தரம் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நவீன், மகேந்திரன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News