செய்திகள்
இது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் - கமல்ஹாசன்
இது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால், இந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு இந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரத மணித்திருநாடு என பதிவிட்டுள்ளார்.