செய்திகள்
எச்.ராஜா

விநாயகர் சதுர்த்தி சிலை அனுமதி... எச்.ராஜா கூறியதை தவறாக புரிந்துகொண்டனர்- பாஜக

Published On 2020-08-20 08:39 GMT   |   Update On 2020-08-20 08:39 GMT
விநாயகர் சதுர்த்தி சிலை அனுமதி விவகாரம் தொடர்பாக ஆண்மையுள்ள அரசு என்று எச்.ராஜா பதிவிட்டதை தவறாக புரிந்துகொண்டிருப்பதாக பாஜக கூறி உள்ளது.
சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பாஜக தலைவர் முருகன், முதலமைச்சர் பழனிசாமியிடம் நேரில் சென்று கேட்டுக்கொண்டார். 

ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்வதாலும், சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு திட்டவட்டமாக அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில் கர்நாடக அரசு விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டி,  பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில் ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என்று எழுதியிருந்தார்.

இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தமிழக அரசை ஆண்மையற்ற அரசாக கூறியதாக எச்.ராஜாவை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இதையடுத்து, ‘தமிழக அரசை கூறியதாக தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்’ என பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறியுள்ளார்.

அதேபோல, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்தது ஒட்டுமொத்த இந்துக்களின் எண்ணமாக இருக்கிறது எனவும் நாராயணன் தெரிவித்தார்.
Tags:    

Similar News