செய்திகள்
விநாயகர் சிலைகள்

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும்- சென்னை ஐகோர்ட்

Published On 2020-08-19 08:04 GMT   |   Update On 2020-08-19 08:04 GMT
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அதை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தடையை மீறி சிலை நிறுவப்படும் என இந்து முன்னணியினர் மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும், விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News