செய்திகள்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி- உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக முறையீடு
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். குறைந்தது 2 அடி முதல் 20 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு இந்து அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி இந்த முறையீட்டை முன்வைத்தார்.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி தாக்கல் செய்த முறையீட்டில், ‘விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதியளிக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் தடை இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும். அதேபோல், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதித்த அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகக் கூறி மனுவாக தாக்கல் செய்ய அனுமதியும் வழங்கி உள்ளனர்.