செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

Published On 2020-08-17 05:17 GMT   |   Update On 2020-08-17 05:17 GMT
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.  1ம் வகுப்பில் சேர மாணவர்கள் வராதபட்சத்தில் பெற்றோர் தரும் ஆவணத்தின் பேரில் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கி உள்ளது.

பள்ளியில் மாணவர்கள் சேரும்போதே இலவச நோட்டு, புத்தகம், சீருடை, கல்வி உபகரண பொருட்கள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் இருந்தால் காலையில் 20 பேர், மாலையில் 20 பேர் என சேர்க்கை நடத்தப்படும். முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News