செய்திகள்
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த அம்மாசி. இவருடைய மனைவி விஜயா(வயது 57). இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாடு மற்றும் கன்றுக்குட்டியை அவருடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது கன்றுக்குட்டி துள்ளிக்குதித்து ஓடியது. அதனை பிடிக்க முயன்றபோது, விஜயா தவறி தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம், பக்கத்தினர் கிணற்றில் இருந்து மீட்டு, சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.