செய்திகள்
பூசாரி கொலை வழக்கில் கைதான முருகவேல், ராஜேஸ்வரி, சத்யா ஆகியோரை படத்தில் காணலாம்.

விழுப்புரம் அருகே பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது

Published On 2020-08-14 14:03 GMT   |   Update On 2020-08-14 14:03 GMT
விழுப்புரம் அருகே பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொன்று விட்டு விட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 45). சின்னக்கள்ளிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு தனது விட்டு சமையல் அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் ராஜேஸ்வரியும், சத்யாவும் சேர்ந்து தனசேகரனை கொலை செய்ததையும், இதற்கு சத்தியாவின் கள்ளக்காதலன் உடந்தையாக இருந்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசாரிடம் பரபரப்பு தகவலை கூறியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

கோவில் பூசாரியான தனசேகரன் மகள் சத்யாவை கடந்த 2017-ம் ஆண்டில் மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்த நிலையில் குமாரின் நண்பரான புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த முருகவேல் (35) என்பவர் கட்டிட வேலை வி‌‌ஷயமாக குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது முருகவேலுக்கும், குமாரின் மனைவி சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

இதற்கிடையில் சத்யா கர்ப்பமானதால் குழந்தை பெற்றெடுப்பதற்காக சின்னநெற்குணத்தில் இருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு குழந்தை பிறந்த பிறகு குமார், வடவாம்பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி சத்யாவை அழைத்துள்ளார். அதற்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், பெற்றோர் வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் சத்யா கூறியுள்ளார்.

அதன் பிறகு முருகவேல், அடிக்கடி வடவாம்பாளையத்திற்கு சென்று சத்யாவுடனான தனது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த வி‌‌ஷயம் தனசேகரனுக்கு தெரியவரவே அவர், தனது மகள் சத்யாவை கண்டித்துள்ளார். மேலும் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மகள் சத்யாவை அடித்து உதைத்துள்ளார். சத்யாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ராஜேஸ்வரியையும் அவர் அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதனால் தனசேகரன் உயிரோடு இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்று எண்ணிய அவரது மனைவி ராஜேஸ்வரியும், மகள் சத்யாவும், தனசேகரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனசேகரனை, மனைவி ராஜேஸ்வரியும், மகள் சத்யாவும் சேர்ந்து அரிவாள்மனை, கத்தியால் வெட்டிக்கொலை செய்தனர்.

உடனே அவர்கள் இருவரும் முருகவேலை வரவழைத்து ரத்தக்கறை படிந்த தனசேகரனின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அப்புறப்படுத்தியுள்ளார். அதன்பிறகு கொலையை மறைத்துவிட்டு தனசேகரனை எலியோ, பூனையோ கடித்து குதறியதாக தாயும், மகளும் சேர்ந்து நாடகமாடியதும் போலீசாரின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து ராஜேஸ்வரி, சத்யா, முருகவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News