செய்திகள்
அபராதம்

முககவசம் அணியாத 177 பேருக்கு அபராதம்

Published On 2020-08-12 16:25 GMT   |   Update On 2020-08-12 16:25 GMT
திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 177 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் வீதியில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூகஇடைவெளியை கடைபிடிக்காமல் விதிமீறல் இருந்தால் அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில்  அவினாசி ஒன்றியம், பல்லடம் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியம், தாராபுரம் ஒன்றியம், குண்டடம் ஒன்றியம், உடுமலை நகராட்சி ஆகிய பகுதிகளை தவிர 16 பறக்கும்படை குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்படி மொத்தம் 743 கடைகள், தொழில் நிறுவனங்களில் குழுவினர் ஆய்வு செய்து 87 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோல் முககவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தியதில் ஆயிரத்து 801 பேரை சோதனை செய்து 177 பேர் முககவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. பறக்கும் படை குழு மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ.38 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல பகுதியில் ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News