செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

Published On 2020-08-11 23:33 GMT   |   Update On 2020-08-11 23:33 GMT
“கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘தேர்தலை பற்றி சிந்திப்பவர் அரசியல்வாதி. மக்களை பற்றி சிந்திப்பவர்கள் நாங்கள்‘ என்று எம்.ஜி.ஆர். கூறுவார். அதே வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம். தேர்தலுக்கு அவசரம் இல்லை. இன்று நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தோடு வாழும் நிலை உள்ளது. இதனால் நம் மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. எங்கள் கவனம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, அதில் இருந்து மக்களை காப்பதில் தான் உள்ளது. தேர்தலை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் வரும்போது, மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்.

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன் திரைப்படத்துறை நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படங்களுக்கு எடிட்டிங் பணிகள் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு, அந்த பணிகள் நடந்து வருகின்றன. எப்போது தியேட்டர்கள் திறந்தாலும் படங்களை திரையிடும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 பேர் வரை கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. இது பெரும்பாலும் உள்அரங்கத்துக்குள் நடைபெறும் படப்பிடிப்பு ஆகும். ஆனால், திரைப்பட படப்பிடிப்புகள் திறந்தவெளியில் பொது இடங்களில் நடைபெறும். இதனால் மக்கள் கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளது. இனி வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Tags:    

Similar News